Monday, February 21, 2005

களம் புகுவாய்!

மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும்
தீனி சமைத்தவனே! தமிழ்
போனதடா சிறை போனதடா! அட
பொங்கி எழுந்திடடா!

காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை!
பூட்டு நொறுக்கிடுவாய்! நிலை
நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி!
ஏற்று தமிழ்க் கொடியே!

முந்து தமிழ்மொழி நொந்து வதைபட
இந்தி வலம் வரவோ? இது
நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு!
வந்து களம் புகுவாய்!

நாறு பிணக்களம் நூறு படித்துநம்
வீறு மிகுந்த குலம் பெறும்
ஊறு துடைத்திடு மாறு புறப்படு!
ஏறு நிகர்த்தவனே!

நாலு திசைகளும் ஆள நடுங்கிய
கோழை எனக்கிடந்தாய்! மலைத்
தோளும் குனிந்தது போலும்! விழித்தெழு
காலம் அழைக்குதடா!

காசி ஆனந்தன்

0 Comments:

Post a Comment

<< Home